Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, April 15, 2009

பெண், மனம், காதல் - மூன்றையும் ஏன் படைத்தீர்கள்?

தவம்

ஆளுயர தாடிகொண்ட
கடும் தவத்தினால்
கடவுள் தோன்ற,
சிந்தனை கொண்ட மனிதன்
ஒரு கேள்வியென்றான்..
இருமாப்புடன் கேளென்றார்,
உலகை படைத்த வானவர்..

'பெண், மனம், காதல்,
மூன்றையும் ஏன் படைத்தீர்?',
எனக்கேட்ட மனிதன்முன்
அதிர்ந்து தலைக்குனிந்து,
மெள்ள கடவுள் மறைந்தார்..

கேள்வியுடனான மனிதன்
மீண்டும் தவம்கொள்ள,
முப்பருவம் கடந்தப்பின்
தோன்றினார் கடவுள் ..

அதே கேள்விகளுடன்
கடவுளை நோக்கிய மனிதன்,
அர்த்தம் புரிந்து வீடு திரும்ப,
மனிதனின் தவத்தை தொடர்ந்தார்,
'அடர்ந்த தாடியுடன்' கடவுள்..

Friday, March 27, 2009

கமல் அண்ணாத்தே, சொந்தப் படம் எடுக்கற நீங்க, சொந்தமா எப்போ படம் எடுப்பீங்க??

பொதுவாகவே இன்ஸ்பிரேஸனுக்கும்(Inspiration) அப்பட்டமான காப்பிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு நளாயினியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'ரோஜா'வும், மகாபாரதத்தில் கர்ணன்னுக்கும் துரியோதனனுக்கும் இருந்த நட்பை சொன்ன 'தளபதி'யும் முதல் வகை. 'பொம்மரில்லு'விலிருந்து அடிக்கப்பட்ட ராஜாவின் 'சந்தோஷ சுப்பிரமணியம்' இரண்டாம் வகை என்றாலும் இவை மொழிமாற்று 'ரீமேக்' என்ற பெயரில் நிதர்சனமாய் ஒரிஜினலிருந்து உருவப்படுகின்றன் (உ.தா. தமிழிருந்து இந்திக்கு சென்ற கஜினி).

விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே ஒரிஜினலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றது. இருப்பினும் இவ்வகையான் ரீமேக்குகளின் மூலம் தமிழுக்கு சில தரமான படங்களும் (ஒரு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை) கிடைக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்து ஆங்கில படங்களில் இருந்து அப்பட்டமாய் உருவப்பட்டு, நம்மூரின் திறமையான டைரக்டர்களின் கைவரிசையில் வெற்றிக்கரமாய் மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிவிழா கண்ட படங்களும் ஏராளம்(ஆங்கில Mementoவில் இருந்து அட்டகாசமாய் மாறி இந்தியாவையே கலக்கிய கஜினி)..

எனக்கு தெரிந்து தமிழில் ஆங்கிலப் படங்களை கரு மாற்றம் செய்து(சிலதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு - மற்றது கப்சிப்) அதிக அளவில் வெற்றிக் கண்டது கமலின் திரைப்படங்களே. ஏறக்குறைய கமலின் வெற்றிப் படங்கள் அனைத்திற்கும் ஒரு ஆங்கில ஒரிஜினல் இருப்பது, கமலின் பரம விசிறியான எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே..

என்னப் பண்றது, கமல் ரொம்ப சிந்திச்சு கஷ்டப்பட்டு எடுத்த அவருடைய சிறந்த படமான HEY RAAM-ஏ ரொம்ப சீக்கிரம் பெட்டிக்குள்ள தள்ளிட்டோம். நம்ம மக்கள் ரசனைக்கு எதுக்கு ரொம்ப மெனக்கெடனும் கமல் நினைக்கிறார் போல.. இனி கமலின் தமிழும் ஆங்கில ஒரிஜினல்களும்.

பி.கு: சொந்தச் சரக்கோ பாரின் சரக்கோ, தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் ஊட்டும் எந்தச் சரக்கையும் சந்தோஷமாக அடிக்க நான் தயார்..

Patch Adams - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்





Very Bad Things - பஞ்சதந்திரம்




What About Bob - தெனாலி




Planes, Trains and Automobiles - அன்பே சிவம்




The Reincarnation of Peter Proud - எனக்குள் ஒருவன்




Moon over parador - இந்திரன் சந்திரன்




Green Card - நள தமயந்தி




Nine to Five - மகளிர் மட்டும்




Mrs. Doubtfire - அவ்வை சண்முகி




She-Devil - சதி லீலாவதி





Tie Me Up, Tie Me Down - குணா





To Sir, With Love - நம்மவர்


Tuesday, March 24, 2009

நினைவுகளில் விகடன் - 2

அப்போ எல்லாம் வாரந்தோறும் வியாழக்கிழமையே விகடன் கடைகளில் கிடைக்கும். பண்டிகை நாட்கள், சிறப்பு மலர் அல்லது சில வாரங்களில் மட்டும், புதன் மாலையே கடைக்கு வந்துடும். இப்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுப் போல, அப்போது நிஜமாகவே எனக்கும், என் அண்ணாவிற்க்கும், 'யார் முதலில் விகடன் படிப்பது'-ன்னு ஒரு போட்டியே நடக்கும். புதன் மாலை பள்ளியில் இருந்து திரும்பியதும், விகடன் வந்துவிட்டதா என்று அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்கு ஒரு மூன்று முறையாவது போயிட்டு வருவோம். முதலில் வாங்கி படித்து விட்டால் ஒரு சொல்ல முடியாத பெருமிதமும், அண்ணா முதலில் வாங்கிவிட்டால் ஏதோ தோற்றுவிட்டது போலவும் ஒரு எண்ணம்.

அதுவும் 90களின் காலக்கட்டத்தில் விகடனில் பல புதுமைகள் வந்துக் கொண்டிருந்த நேரம். 25 லட்ச ரூபாய் பரிசுப்போட்டி (அது பத்தி தனி பதிவு), முத்திரைக் கதைகள், சிறப்புக் கவிதைகள்-ன்னு பல போட்டிங்க வைச்சு கலக்கிட்டு இருந்தாங்க. அதனால முதல்ல யாரு விகடன் படிச்சு விடையை கண்டுப் பிடிக்கறாங்க-ன்னு எங்களுக்குள்ள பயங்கரப் போட்டி. அந்தப் பிரீயட்ல விகடன் ஆரம்பிச்சு வெச்ச விளையாட்டுத்தான் கடைசிப் பக்க 3D படங்கள்..

ஒவ்வொரு வாரமும், யாரு முதல்ல விகடனை வாங்கி, வந்திருக்கிற 3D படம் என்னன்னு கண்டுபிடிக்கறாங்கன்னு போட்டி. அண்ணா முதல்ல பார்த்துட்டா, 'இது திமிங்கலம்'-ன்னு சொல்ல, நான் பார்த்துட்டு 'இல்ல இது வவ்வால்'ன்னு அடிச்சு விடுவேன்.. ஏன்னா அது என்னப் படம் அப்படின்னு விகடன்ல எங்கேயும் க்ளூவோ விடையோ இருக்காது. அவங்கவங்க சொன்னதுத்தான் சரி-ன்னு அடுத்த விகடன் வர வரைக்கும் சொல்லிட்டு சுத்துவோம்...

முத வாரம் 3D படம் வந்ததும், அது என்ன, எப்படி பார்க்கறதுன்னு தெரியலை.. ஒரு ரெண்டு மூணு படம் பார்த்ததும், எப்படி வெச்சு பார்க்கனும்ன்னு பிடிபட்டுடிச்சி.. அதுக்கு அப்புறம் வந்த வாரங்களில, படத்தை பார்த்ததுமே என்னன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்னா பாருங்களேன்..

இந்த 3D படத்தை கேள்வியே படாதவங்களுக்கும், மலரும் நினைவுகளுக்காகவும், சில 3D படத்தை கீழே தந்து இருக்கேன்.. முதல்ல ட்ரை பண்றவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், விடாமல் முயற்சி பண்ணுங்க.. கண்டிப்பா ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் காத்துக்கிட்டு இருக்கு. 'படம் எப்படி பார்க்கறது'ன்னு உதவிக்கு சில தொடர்புகளையும் இணைச்சு இருக்கேன் (http://www.3dphoto.net/text/viewing/technique.html, http://www.magiceye.com).

இப்போ ஜோரா எல்லோரும் கீழே இருக்கற 3D படங்களை பார்த்துட்டு, இந்த 3D படங்களில் இருக்கறது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).





Saturday, March 21, 2009

டைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா??

போன வாரம் ஒளித்தட்டுல 'இந்தியன்' படத்தை மீண்டும் பார்த்தேன்.. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் 'பச்சைக்கிளிகள் தோளோடு' பாடலின் இறுதியில் வரும் இக்காட்சி படத்துடன் ஒன்றிப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. படம் முடிந்ததும், மீண்டும் பாடல்களை மட்டும் ஓட விட்டு பார்க்கையில், பாடல் காட்சியில் இருந்த சிறு தவறு பிசிறியது. அது என்னக் காட்சின்னு இந்த நிழற்படத்தில் பாருங்க (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).





என்னத் தப்புன்னு கண்டுப்பிடிச்சுட்டிங்களா? கூகிளாண்டவரில் தேடியதில், ஒரிஜினல் கிராபிக்ஸ் காட்சியில் இரண்டு கமல் ஆடும்படி மட்டுமே அமைப்பதாக முதலில் ஷங்கருக்கு எண்ணமாம். பட வேலைகளின் போது, கிராபிக்ஸ் இயக்குனர் வெங்கி, இரண்டு கமலுக்கும் பின்னால் ஒரு கண்ணாடியை போட்டு, கமலின் உருவ பிரதிபலிப்பைக் காட்டினால் இயல்பாய் இருக்கும் என்று ஷங்கரிடம் ஒகே வாங்கி, அந்த அலமாரியும், கமலின் பிரதிபலிப்பையும் கிராபிக்ஸில் கொண்டு வந்தாராம். கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதாலோ என்னவோ, ஒவ்வோரு காட்சியையும் மிகவும் சிரத்தையுடன் அணுகும் ஷங்கர், இதை கவனிக்க தவறிட்டாருன்னு நினைக்கிறேன்..

இன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.

1. நிழற்படத்தோட தரம் சரியில்லன்னு நான் முதல்ல ஒழுங்கா ஒத்துக்கறது(பின்ன youtube-ல இருந்து சுட்டா??),
2. என்ன தப்புன்னு, படத்துல வட்டம் போட்டு காட்டிடறது..



3. அப்படியும் புரியாத 'ஓளிவிளக்கு'-க்கு (அதுதாங்க tubelight), கண்ணாடிக்கு முன்னே நின்னு பார்த்தா உங்க முகம் தெரியும், கண்ணாடிக்கு முதுகு காமிச்சு நின்னாலும், கண்ணாடியில் உங்க முகம் தெரியுமா??

ஒரிஜினல் பாட்டுக் கீழே, நீங்களே பார்த்துக்கங்க..

Tuesday, March 17, 2009

சாப்ட்வேர் இஞ்சினியராய் வடிவேலு..



"காது இந்த வீங்கு வீங்கியிருக்கே, எத்தனைப் பேரு உங்களை பேசினாங்க?"

"முதல்ல ஒரு மூணு நாலுப் பேருத்தான் பேசினாங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது ஒரு மேனேஜரு, இன்னொரு மேனேஜருக்கு போன் பண்ணி, "ப்ரீயா இருந்தா வாங்க, ஒருத்தன் சிக்கி இருக்கான்"ன்னு சொன்னான்.

அந்த மேனேஜரு சொன்னான், "நான் கொஞ்சம் பிசியா இருக்கேன், வேணும்னா, என்னோட ரூமுக்கு அனுப்பி விடு, நான் பார்த்துக்கறேன்"-ன்னான். இவனுங்க முடிச்சவுடனே ஒரு கம்பெனி ஷட்டில புடிச்சு, அந்த மேனேஜருக்கிட்ட அனுப்பி விட்டுட்டாங்க. அங்க ஒரு ஏழுப் பேரும்மா. அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பேசினாங்க.. அந்த மீட்டிங் முடிஞ்சதும், இன்னொரு ஷட்டில புடிச்சு, என்னை ஏத்தி விட்டுட்டாங்க..

சரி நம்மள வேலையை பார்க்கத்தான் அனுப்பறாங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தேன்-மா. அந்த ஷட்டிலு நேரா இன்னோரு 2nd லெவல் மேனேஜரு பில்டிங்க்கு போச்சு.. அந்த மேனேஜரு ரூமுக்குள்ள 11 பேரும்மா.. 3 மணி நேரம்.. காது வலிக்க வலிக்க பேசினாங்க.. சரி பேசிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.."

"விட்டுட்டிங்களா, திரும்பி நீங்கப் பேசலை??"

"இல்லை"

"ஏன்?"

"அவங்க பேசும்போது ஒருத்தன் சொன்னான், 'எவ்வளவு பேசினாலும், இவன் கேட்கிறான்டா, இவன் ரொம்ப நல்லவன்'டான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா. நானும் இவனுங்க பேசறதக் கேட்கற மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கறது"..

உ ஊ ஊஊஊஊஊ

Monday, March 16, 2009

கல்லூரியும் கற்று மற - 1

"பூர்ணிமா, வேணா இன்னிக்கு ஈவினிங் 7 - 7:15 மணிக்குள்ள, யாருக்கும் தெரியாம தனியா உட்கார்ந்து நீ ஏதாவதொரு FM சேனல்ல ஒரு தமிழ் பாட்டுக் கேளு.. நாளைக்கு காலையில நீ என்ன FM-ல என்ன தமிழ் பாட்டுக் கேட்டேன்னு நான் சொல்றேன்."

"சரி வருண், நான் இன்னிக்கு கேட்ட பாட்டு என்னன்னு கரெக்டா நீ நாளைக்கு சொல்லிட்டா, உனக்கு மாய மந்திரம் எல்லாம் தெரியும், அப்படின்னு நான் ஒத்துக்கறேன்."

விளையாட்டாய் தான் ஆரம்பித்தது.. பூர்ணிமா எங்கள் வகுப்பின் டாப் ரேங்க் மாணவி.. "என்னப்பா, நிஜமாத்தான் சொல்றீங்களா?" என்பது பூர்ணிமாவின் டிரேட் மார்க் வசனம். நூற்றுக்கு 2 மார்க் வாங்கிவிட்டு பருத்தி வீரன்கள் நாங்கள் லந்துக்கட்ட, நூற்றுக்கு 98 மார்க் வாங்கிவிட்டு 2 மார்க் போய்விட்டதே என்று அலப்பறை பண்ணும் பார்ட்டி இவர்.

வகுப்பில் மொத்தம் இருந்த 17 மாணவர்களில், 13 பேர் கல்லூரி விடுதியில் தங்கிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த காலம் அது.. "பென்சில் ஜோசியம், மேஜிக்" என ஆளாளுக்கு நாங்கள் கதை அளந்துக் கொண்டிருந்தாலும், வருணின் இந்த 'மந்திரம்' சுத்தி நின்று கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு புரிபடவேயில்லை. விடுதிக்கு திரும்பியதும், வருண் சொன்ன பிளானைக் கேட்டதும், மிகவும் உற்சாகமாகி, அவனுக்கு எல்லா உதவியும் செய்வதாக ஒப்புக்கொண்டோம்.

பிளானின் முதற்படி, அக்காலத்தில் இருந்தது மொத்தம் 4 தமிழ் FM சேனல்கள். ஆக எங்களுக்கு தேவைப்பட்டது, 4 ரேடியோக்கள் (பின்ன, 4 சேனல்களிலும் 7-7:15 என்ன பாட்டு போடறான்னு தெரியனும் இல்ல?). ஆரம்பித்தது எங்களின் ரேடியோ தேடல், விடுதியில் ஒவ்வொரு ரூமாய் சென்று கெஞ்சிக் கூத்தாடியதில் 3 தான் சிக்கின. முயற்சியில் சற்றும் மனம் தளராமல், பிளானின் அடுத்த கட்டமாய் சரியாக மாலை 7 மணிக்கு ஆரம்பித்து, 3 ரேடியோக்களில் 4 FM சேனலையும் மாற்றி மாற்றி 7:15 வரை ஒலிபரப்பான மொத்தம் 5 பாடல்களையும் ( நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, புது வெள்ளை மழை இங்கு, மதுரை மரிக்கொழுந்து வாசம், யாதும் ஊரே யாவரும் கேளீர், ஜெர்மனியின் செந்தேன் மலரே) குறித்துக் கொண்டோம்.

பிளான்படி 4 FM சேனல்-லயும் குறிப்பிட்ட டைம்ல என்னென்ன பாட்டு-ன்னு கேட்டாச்சு. ஆனா 5 பாட்டுல பூர்ணிமா என்னப் பாட்டுக் கேட்டு இருப்பாங்கன்னு கண்டுப் பிடிக்கணும். பூர்ணிமா, 'இளையராஜா விசிறியா', 'ரகுமான் விசிறியா', அவங்க டேஸ்ட் என்ன, 5 பாட்டுல இருந்து, வருண் பூர்ணிமா கேட்ட அந்த ஒரு பாட்டை எப்படி குத்துமதிப்பா சொல்லப்போறான் அப்படின்னு அன்னிக்கு நைட் புல்லா யோசிச்சுக்கிட்டே தூங்கிட்டோம்.

அடுத்த நாள் காலையில எங்களுக்கு எல்லாம் ஒரே படபடப்பா இருக்கு. வருண் மட்டும் பெருசாக ஒண்ணும் கண்டுக்கலை. "மச்சி, இப்போ இந்த 5 பாட்டையும் தனித்தனியா 'என்ன பாட்டு, படம், சேனல், பாடினவங்க-ன்னு' எழுதிக் வெச்சுக்கலாம், இல்லைன்னா மறந்துடுவோம்" அப்படின்னான். சரி ஆச்சுன்னு, அந்த பாட்டுங்களை தனித்தனி பேப்பர்-லயும் எழுதிட்டு கிளாஸுக்கு கிளம்பியாச்சு.

உள்ளே நுழைஞ்சதும் "ஏ வருண், என்ன என்னைப் பார்த்துட்டு ஓடற, சும்மா கதைத் தான விட்ட என்கிட்ட?"

"பூர்ணி, நேத்து நான் சொன்ன டைம்ல நீ தமிழ் FM-ல பாட்டுக் கேட்டியா?"

"நீ சொன்ன டைம்ல ஒரு தமிழ் பாட்டுக் கேட்டேன்பா, நீ கதை விடலைன்னா, உனக்கு நிஜமாலுமே மந்திரம் தெரியும்-னா, அது என்னப் பாட்டுன்னு சொல்லுப் பார்ப்போம்.."

இதற்க்குள் விசயம் பரவி மொத்த வகுப்பு பெண்கள் கூட்டமும் இப்போ சுத்தி நின்னுட்டாங்க. பசங்களுக்கு எல்லாம், விரல்ல இருந்து கடிச்சு துப்ப நகமே இல்லைங்கற அளவுக்கு ஒரே டென்சன். வருணுக்கும் இதே நிலைமைத்தான்..

ஆனாலும் "பூர்ணி, நேத்து நீ என்னப்பாட்டு கேட்டேன்-ன்னு இப்போ எல்லார் முன்னாடியும் சொல்லு, நான் எனக்கு மந்திரம் தெரியும்னு உனக்கு நிரூபிக்கிறேன்"

கொஞ்ச நேரம் பூரணி யோசிச்சுட்டு, "சரி வருண், நான் நேத்துக் கேட்ட பாட்டு வந்து, 'மதுரை மரிக்கொழுந்து வாசம்'ன்னு இளையராஜா பாட்டு, சூரியன் FM-ல கேட்டேன்"

உடனே நம்ம பய இதைக் கேட்டுட்டு விட்டான் பாருங்க ஒரு டயலாக்.

"எல்லோரும் நல்லா பாருங்க, பூர்ணி கேட்ட இந்தப் பாட்டை நேத்து நைட்டே என்னோட மந்திரத்துல கண்டுப்பிடிச்சு ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுட்டேன். இந்தாங்க, நீங்களே இதை படிச்சு பாருங்க-ன்னு" நாங்க எழுதி வெச்சிருந்த அந்த பாட்டு பேப்பரை அவனோட பேண்ட் பாக்கெட்-ல இருந்து எடுத்து கொடுத்துட்டான்.

நாங்க காலேஜ் படிச்ச 3 மூணு வருசத்திலேயும், வருணுக்கு நிஜமாவே மந்திரம் தெரியும் அப்படின்னே பூரணி பயந்துக்கிட்டு இருந்தாங்க.

பி.கு: "டேய் வருண், மொத்தம் 5 பாட்டுன்னு, 5 பேப்பர் இருந்ததேடா, எப்படி பேண்ட்ல இருந்து கரெக்டா அந்த பாட்டு பேப்பரை மட்டும் எடுத்துக் குடுத்தே.."

"மச்சி, 5 பேப்பரையும் ஒவ்வொன்னா நான் வேற வேற பாக்கெட்ல வெச்சுக்கிட்டேன். பேண்டல நாலும், சர்ட் பாக்கெட்ல ஒண்ணுன்னு"..

"ஸுப்பர்-டா, அப்புறம் ஏண்டா நீயும் அவ்வளவு டென்சனா இருந்தே?"

"மச்சி, பூர்ணி பாட்டை சொன்னதும், நாம எழுதி வெச்ச 5-ல ஒண்ணுத்தானதும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. ஆனா எந்த பாட்டு எந்த பாக்கெட்ல வச்சேன் அப்படிங்கறதை மறந்துத் தொலைச்சுட்டேன். அதை யோசிக்கத்தான் ரொம்ப டென்சனாயிடுச்சி,.."

(நீங்க யோசிக்கறதும் ரொம்ப கரெக்ட், வருண் இப்போ மேனேஜரா நல்லா குப்பைக் கொட்டிட்டு இருக்கான்)..

Sunday, March 15, 2009

நினைவுகளில் விகடன் - 1

விகடனின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில், விகடனில் வெளிவந்த, என்னை பாதித்த படைப்புக்களை பகிரும் ஒரு முயற்சி..

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர், விகடனில் வெளிவந்த இக்கவிதையை(முத்திரை?), இன்றும் யாராவது நினைவில் வைத்திருக்கின்றீர்களா? ஒருப் பெண்ணின் வல்லிய பிரச்னையை 5 வரிகளில் உணர்த்தும் இக்கவிதை சுஜாதா பிரபலப்படுத்திய Haiku (கவிதையின் இறுதி வரியில் ஒரு மெல்லிய திடுக்!!) வகையறாவை ஒத்திருக்கும்.

குப்பைத் தொட்டியின்கீழ்
ரத்தம் தோய்ந்த
சானிடரி நாப்கினை
பார்க்கையில்
அடிவயிற்றை வலிக்கின்றது..
ஆண்மகனாகிய எனக்கும்..

(இதை எழுதிய கவிஞர் பெயர் நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்).

Friday, March 13, 2009

கேள்வி



வீட்டு மார்கேட்ஜும்
கிரெடிட் கிரைஸஸும்
சேர்ந்திங்கு வந்ததால்
பொருளாதார வீழ்ச்சி..

எனக்குத்தான் இல்லையே,
வாங்கவொரு வீடும்
கிரெடிட் கொள்ள கார்டும்..

பிறகேன் வந்தது,
இக்குடிசையுனுள்
பொருளாதாரத்தின் தாழ்ச்சி??

அன்றும், இன்றும்..



மீசையுடன் அரும்பத்
தொடங்கியதும் காதல்..
மீசையுடன் நரைக்கத்
தொடங்குவதும் காதல்...

சாபம் கொண்ட நெருப்பினால்
மதுரை எரிந்ததும் காதல்..
கோபம் கொண்ட விழியினால்
நீயென்னை எரிப்பதும் காதல்...

பார்வதி பின் சென்று
தேவதாஸ் ஆனதும் காதல்..
யுவதிகள் பின் சென்று
அகதிகள் ஆவதும் காதல்..

'அடி'யவள் வந்ததும்
'குடி'யவன் விட்டதும் காதல்.
'புதுவை' சென்றதும்,
மதுவை கொள்வதும் காதல்..

பிரிந்த அக்கணங்களில்,
தாடியை வளர்த்ததும் காதல்..
சேர்ந்திருக்கும் இக்கணங்களில்
தாடி வளர்வதும் காதல்..

அன்று
காதல் போயின்
சாதல் சாதல்..

இன்று
சாதலே ஆயினும்
வேண்டாம் இக்காதல்..

Wednesday, March 4, 2009

ஆதலினால் காதல் செய்வீர் - 1



பிரிந்து செல்லும்முன்
உனக்கோர் விண்ணப்பம்..

நாளைய பொழுதில்
எங்கேனும் சந்திக்கையில்
கணவரென எவரையும்
முகாந்திரம் செய்யாதே..

இறுதிவரை எனதுலகில்
எனக்கே உரியவளாய்
உன்னை நிறுத்திக்கொள்ள..

என்ன செய்வது இவரை??



எப்பொழுது எங்கு போகிறார், எவரிடமும் சொல்வதில்லை,
எப்பொழுது வீடு திரும்புவார், எவருக்கும் தெரிவதில்லை..

ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை,
இருந்த இடத்தில் பொருள்கள் இருப்பதுமில்லை..

நாம் சொல்வதை அவர் கேட்பதுமில்லை.
அவர் சொல்வது நமக்கு புரிவதுமில்லை..

நமது உணவு அவருக்கு பிடிப்பதில்லை.
அவர் உண்பது நமக்கு உணவேயில்லை..

வேலை அசதியினால் நமக்கு தூக்கம்.
அசராமல் தூங்குவதே இவருக்கு விருப்பம்....

இருக்கும் பழைய பொருளை உடைப்பதும்
உடைப்பதற்க்கு புதிய பொருளை கேட்பதும்

3 வயதில் "அவரிடம்" சொல்வதற்கு ஒன்றுமில்லை...

இருப்பினும்
என்ன செய்வது இவரை??

Friday, February 6, 2009

நான் கடவுள் - விமர்சனம்..



சன்னியாசியாய் காசியில் இருந்து வந்து சமுதாயத்தில் தனித்துத் திரியும் ருத்ரன, கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டு சமுதாயத்தில் சிக்கித் தவிக்கும் கண் பார்வையற்ற அம்சவல்லி என முற்றிலும் இருவேறு பின்புலம் கொண்ட மனிதர்கள், சமூகத்தில் வாழ பிடித்தம் இன்றி, அவர்களுக்குள் நிகழும் இறுதிச் சம்பவங்களே படத்தின் கதைக்களம். இருவருக்கும் நேரிடும் இயல்பான ஒரே மாதிரி சம்பவங்கள், வாழ்வின் போக்கை தீர்மானிக்கின்ற இயல்பை அழகாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர் பாலா.

"வாழ கூடாதவர்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை - மரணம்"
"வாழ இயலாதவர்களுக்கு நீ கொடுக்கும் மரணம் - வரம்"
படத்தில் இரு தடவை வரும் இந்த இணை வசனம்(subtitle) படத்தின் திரைக்கதையை தீர்மானிக்கின்றது..

வடக்கே காசியில், கங்கைக் கரையில் அமர்ந்து, இறந்தவர்களுக்கு மோட்சத்தையும் மறுப்பிறப்பையும் தீர்மானிக்கும் அகோரியான ருத்ரனை, தனது மனைவியிடம் காட்ட ஊருக்கு கூட்டிச் செல்ல விரும்புகின்றார், ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டு 14 வருடங்களுக்கு முன், மகனை காசியில் விட்டு சென்ற தந்தை... "உறவுகள் என்று எதுவுமிலை உனக்கு.. எல்லா உறவுகளையும் அறுத்தெறிந்து விட்டு வா.. என்னை அடையும் நேரம் உனக்கு தெரியும்" என அகோரி குரு, ருத்ரனை தந்தையுடன் அனுப்பி வைக்கின்றார்..

தெற்கே தமிழகத்தில், நல்லக்குரல் வளம் கொண்ட கண் பார்வையற்ற அம்சவல்லியை கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் இருந்து இழுத்து வந்து, பாடி பிச்சை எடுக்க வைக்க நினைக்கும் தாண்டவன், அவரின் கூலியாளாய் முருகன், மற்றும் ஒரு திருநங்கை என உடல் ஊனமுற்றவர்களை வைத்து தொழில் நடத்தும் ஒரு கூட்டம். "இனிமே நீ அவங்கக்கூடத்தான் இருக்கனும், அவங்க சொல்றபடித்தான் கேட்கனும்" எனறு சொல்லி அம்சவல்லியை தாண்டவனிடம் அனுப்பி வைக்கின்றார் ஒரு போலீஸ் அதிகாரி..

ஒருபுறம், தமிழகம் வந்து சேரும் ருத்ரன் மனம் முழுதும் வன்மைக் கொண்டு தாய், தந்தை, தங்கை என சொந்த குடும்பத்துடன் ஒட்ட இயலாமல், மலைக்கோவிலில் வாழும் சாமியார்களுடன் சேர்ந்து சுற்ற, மறுபுறம் பிச்சைக் கூட்டத்தில் வந்துச் சேரும் அம்சவல்லி, தனது வளர்ப்பு குடும்பத்தை மறக்க இயலாமல், பிச்சைக் கூட்டத்தில் சேர்ந்து பாடிப்பிழைகின்றார்..

குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கும் தாயிடம் இருந்து ருத்ரனும், தவறான வழிகளில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கும் தாண்டவனிடம் இருந்து அம்சவல்லியும் பிரிந்து நல்வழி அடைவதுடன் படம் நிறைவடைகின்றது..

முதலில் படத்தின் நிறைகள்..

"வீட்டுக்கு வாடா, 10 மாசம் சுமந்துப் பெத்தேனே, அதுக்காகவாவது இரக்கம் காட்டக்கூடாதா" என்று ருத்ரனிடம் கேட்கின்றாள் ருத்ரனின் தாய். இதற்கு ருத்ரன்,

"ஐந்திரண்டு திங்களாய் அடங்கியிருந்த தூமே!!
கையிரண்டு, காலிரண்டு, கண்ணிரண்டு ஆனதே..
உடம்பாவது ஏதடி, உயிராவது ஏதடி,
உடம்பால் உயிரெடுத்த உண்மை ஞானி நானடி"

என்றுவிட்டு

"தூமே"ன்னா என்னான்னு தெரியும் இல்ல?? என்று தனது தாயிடமே கேட்பது மிக அதிர்ச்சியூட்டும் வசனம்.

இந்த நான்கு வரிகளில் ருத்ரன் அளிக்கும் பதில் அவனின் தனிமையை, தாயின் மீதான கோபத்தை அழுத்தமாய் எடுத்துக் காட்டிவிடுகின்றது. வசனகர்த்தா ஜெயமோகன் ஒரு பத்து பக்க வசனத்தை "தூமே" என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கி இருப்பது மிகவும் அசாத்தியம்..இருப்பினும், இவ்வசனம் சென்சாரின் கத்திரிக்கு பலியாகாதது ஆச்சரியமே..

மேலும் படத்தின் பல இடங்களில் ஜெயமோகனின் வசனம் படத்திற்க்கு வலுச்சேர்க்கின்றது..

* "ஜாலியாய் பிச்சை எடுத்து, சந்தோசமாய் இருக்கோனும்.."
* "அம்பானி, செல்போன் விக்கிறவங்க.."
* "இவரும் நாலு உருப்படியை சேர்த்து, தொழிலதிபர் ஆகி ஒரு நடிகையை கல்யாணம் கட்டிக்கிடடும்.."
* "இந்த வேசத்தைப் போட்டுத்தான் ஆந்திராவில ஆட்சியையே பிடிச்சாங்க.."
* சிவாஜி எம்ஜிஆரிடம், "அண்ணா, இப்படி எவ்வளவே கருத்துக்களை சொன்னீங்க.. பாட்டை நல்லா கேட்டுட்டு, ஓட்டை மட்டும் தான போட்டான்.. ஒருத்தனும் திருந்தலையே"
* கான்ஸ்டபிள் ரஜினியிடம் (நுண்ணரசியல்) - "அது எல்லாம் சரி, நீங்க ஒத்த கால்ல நிக்காதீங்க.. ஸ்டேசனுக்கு ஆகாதில்ல"

அந்த வில்லனின் கூடாரமாய் காட்டப்படும் கோவில் அட்டகாசமான லொக்கேசன் - எங்கேத்தான் பிடித்தார்களோ அந்த இடத்தை? தமிழ நாட்டில் நிஜமாலுமே இப்படி ஒரு கோவில் இருக்கிறதா?

வடிவேலுவுடன் பல படங்களில் கேனத்தனமாய் நடித்தவரா இவர், என நம்ப முடியாதபடி முருகன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி.. இவருக்கும் உடன் நடித்திருக்கும் நிஜ திருநங்கையான கீர்த்தனாவுக்கும் நடிக்க நிறைய வாய்ப்புக்கள். இதற்கு முன் கேமராவிற்க்கு நின்றிராத குட்டிச் சிறார்களும், நிஜத்தில் உடல் ஊனமுற்றவர்களும் படத்தில் மிக இயல்பாக நடித்திருக்கின்றனர். தாண்டவன் பாணியில் சொல்வதென்றால், நடிப்பென்றால் என்னவென்றே தெரியாமல் 50/100 படங்கள் முடித்தவர்களை படுக்க வைத்து, அவர்களின் வாயில் இந்த குட்டிச் சிறார்களை தாராளமாய் "அடிக்க" சொல்லலாம். இத்தகைய விளி நிலை மனிதர்களை அழைத்து வந்து, 3 வருடங்கள் போராடி, அவர்களிடம் இருந்து சினிமாத்தனம் இல்லாத நடிப்பை வெளிக்கொணர்ந்த பாலாவிற்க்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்..

இந்துக்களின் மலைக்கோவிலில் "ஆறு மலை, எந்த மலை, ஏழு மலை" என்றுப் பக்திப் பாடல் பாடும் ஒலிப்பெருக்கியில் "உபயம்: ரஹிம் டாக்கீஸ்" என்று காட்டுவது, நடைமுறையில் முரணாகத் தோன்றினாலும், தேசிய ஒருமைப்பாட்டின் directorial touch..

படத்தை தூக்கி நிறுத்த முயலும் ஒற்றை ஆளாய், இளையராஜா.. தன்னுடைய favourite ஆன்மிகம் சார்ந்த படம் என்பதால், மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓம் சிவா ஓம் பாடலும், பிச்சைப் பாத்திரமும் இளையராஜாவின் top 100-ல் கண்டிப்பாய் இடம் பிடிக்கக் கூடியவை.. அதுவும் ஓம் சிவா ஓம் பாடலில், ஆர்யாவிற்க்கு கிடைத்த தலைக்கீழ் ஆசனம் ஓப்பனிங் சீன், பிதாமகனுக்கு அடுத்தப்படியானது. புவியீர்ப்பு விசை விதிகளைத் தாண்டி 60அடியில், புடவைச் சுற்றிக்கொண்டு ஓப்பனிங் சீனில் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு ரசிகனுக்கு நிச்சயம் இதுவொரு புது அனுபவம். இதை முன்மொழிந்த பாலாவிற்க்கும், அதை ஏற்று ஓரே மாதத்தில் தலைக்கீழ் ஆசனம் கற்றுக்கொண்டு வழிமொழிந்த ஆர்யாவின் முயற்சிக்கும் ஒரு hats off.

இவ்வளவு இருப்பினும், படத்தில் மிகப்பெரிய குறைகளும் உண்டு..

முதலில் ருத்ரனின் பாத்திரப்படைப்பு.. அகோரிகளை ஒரு"cannibals " போன்று படத்தில் காட்டியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.. அகோரிகள் எவரையும் உணவிற்க்காக துன்புறுத்துகிறவர்கள் அல்ல.. அவர்களைப் பொறுத்தவரை, கோழி இறைச்சியும் ஒன்று தான், மனித இறைச்சியும் ஒன்று தான்.. இது சகிப்புத்தன்மையை மிகவும் வளர்ப்பதாகவும், விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையை பெற உதவும் வழி என்பதும் அவர்களின் நம்பிக்கை. "உலகில் எதையும் வெறுக்கக்கூடாது, சகிப்புத்தன்மை அற்று, மனதில் வெறுப்பும் கொண்டிருந்தால், நிம்மதியாய் தியானம் செய்து, கடவுளை நெருங்க இயலாது" என்பதால் விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்..

ஆனால், படத்தில் அகோரிகளை பற்றி சொல்லப்படும் முன்னுரை இதற்கு முரணாக இருக்கின்றது..

"ஆண்டவன் நமக்கு இந்த பிறவியை குடுத்து இருக்கலாம்.. ஆனால், மறுபிறவியை தடுத்து நிறுத்தற சக்தி அகோரிகளுக்கு இருக்கு.. மோட்சம் யாருக்கு கொடுக்கணும், யாருக்கு கொடுக்கக் கூடாதுங்கறது, இவங்களுக்கு நல்லாவே தெரியும்" எனும்பொழுது, அகோரிகளின் பாத்திர வடிவமைப்பு அடிப்பட்டு போகின்றது..

மேலும், தமிழகம் திரும்பும் ருத்ரன், அவனின் சகோதரனின் மாலையிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு கேட்கும், "அவனா செத்தானா, நீயே கொன்னுட்டியா?" என்னுமிடத்திலும், பெற்ற தாயையே "தூமே" என்று அசிங்கப்படுத்துவதிலும் அகோரியான ருத்ரனின் கதாபாத்திரம் வலுவிழந்து விடுகின்றது. ஆக ருத்ரன் என்பவன் ஒரு உண்மையான அகோரியா, அனாதையாக தனித்து வளர்ந்ததால் வெறும் வன்மம் கொண்டு திரியும் ஒரு சாதாரண மனிதரா, அல்லது வழக்கமான பாலாவின் பட நாயகர்களை போன்ற ஒரு அசாதாரண பாத்திரமா என்பதில் குழப்பமே மிஞ்சுகின்றது.

ருத்ரனின் தாய் தனது மகளிடம், "அவன் ஒரு சுயம்பு-மா, அவன் வீட்டுக்கு வரமாட்டான்" என்று சொல்லுமிடத்திலேயே, ருத்ரனுக்கு உறவுகள் அறுந்துவிடுகின்றது.. இதற்குப் பிறகும், 'உறவுகளை அறுத்துவிட்டு வா' எனும் குருவிடம் திரும்பாமல், ருத்ரன் மலைக்கோவிலிலே சுற்றும் காரணம் படத்தில் சொல்லப்படவேயில்லை. 'என்னை வந்துச் சேரும் நேரம் உனக்கு தெரியும்' என்றுக் குரு சொல்லியிருப்பினும், ருத்ரன் காசி திரும்பாததற்க்கு காரணம், வாழ கூடாதவர்களுக்கும், வாழ இயலாதவர்களுக்கும் மரணத்தை அளிக்கவா, அல்லது படம் முடியட்டும் என்ற காத்திருப்பா? எப்படி இருப்பினும், அகோரி குருவின் உத்தரவு அதுவல்ல என்பதால் இந்த கேள்வி பார்வையாளர்களின் மனதில் தொக்கி நிற்கின்றது.

இப்படத்தில் எனக்கு எழும் மற்றொரு கேள்வி, மிகவும் விகாரமான அருவெருப்பான தோற்றம் கொண்ட ஒருவன், தன்னுடைய பாலியல் தேவைக்கு முகம் சுளிக்காமல் அழகை நோக்காமல் உடன்படும் ஒரு பெண்ணைத் தேடுகின்றான். மேலும், அந்த விகாரமான தோற்றம் கொண்டவர், மிகவும் வசதியானவராகவும், அதுவரை எந்தப் பெண்ணையும் வண்புணர்ச்சி செய்யாத நல்லவராகவும் காட்டப்படுகின்றார். இவருக்கு அம்சவல்லியை மணமுடிக்க எண்ணுகின்றார், தாண்டவன். ஆனால், இயற்கையிலேயே கண் பார்வையை இழந்த அம்சவல்லிக்கு, 'அக' அழகின்றி, 'புற' அழகை காண இயலாது. வெள்ளை/கருப்பு, அழகு/அருவருப்பு என பிரித்தறிய இயலாத அம்சவள்ளி, அவரை மணமுடிக்க சம்மதிக்காததற்க்கும் சரியான காரணங்கள் சொல்லப்படவேயில்லை. தாண்டவனிடம் மிகவும் சித்திரவதைக்கு ஆட்பட்டு, பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்படும் அம்சவல்லி, தோற்றத்தில் மட்டும் அருவருப்பாக உள்ள ஒருவரை மணக்க சம்மதிப்பதில் என்னக் தவறு, என்னப் பிரச்சினை? தாண்டவன் அருவருப்பான தோற்றம் கொண்டவருடன் அம்சவல்லியை போகச் சொல்லி சித்ரவதை செய்தும், போக மறுக்கும் அம்சவல்லியின் பிடிவாதம், விவாதத்திற்க்குரியது.

அம்சவல்லியை விடவும் மிகவும் உடல் குறைபாடு உள்ளவர்களை படம் முழுதும் தன்னம்பிக்கையுடன் உலாவ விட்ட பாலா, கண் பார்வையற்ற அம்சவல்லி கதாபாத்திரத்தை மேலோட்டமாக அமைத்தது ஏன்? உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் விளி மனிதர்களின் ஒருமித்த கேள்விகளாக படத்தின் இறுதியில் அம்சவல்லி கேட்கும் கேள்விகள் நியாயமாக இருப்பினும், அம்சவல்லியின் மரணம் இதற்கு பதில் அளிப்பதாக இல்லை. இவர்களுக்கும் நமக்கும் உண்டான இடைவெளியை குறைப்பதற்கோ, அவர்களின் மீது நமக்கு பாலா ஏற்படுத்த விரும்பிய ஒரு கவன ஈர்ப்பையோ, அம்சவல்லியின் மரணம் ஏற்படுத்த தவறுகின்றன. அம்சவல்லியின் மரணத்தின் மூலம் பாலா சொல்ல விரும்பியது இதுதான் என்றால், இப்படத்தை விடவும் ஒரிரு பக்கங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் மதுபாலாவை பற்றி எழுதியுள்ள இக்கட்டுரை <http://jeyamohan.in/?p=1504> ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் அதிகம்..

3 வருட உழைப்பு, 15 கோடி செலவு, அதிக சிரத்தையுடன் இளையராஜா, ஆர்யாவின் தியாகம், விளி நிலை மனிதர்களை நடிக்க வைத்தது, அகோரிகள் அறிமுகம், பூஜா-வின் தைரியம் என்று இத்தனை இருந்தும்...

ஒரு நாவல் படிக்கும் பொழுது, பிடிக்கவில்லை என்றால், படிக்க முடியவில்லை என்றால், அடுத்தப் பத்திக்கு, பக்கதிற்க்கு தாவிடும் வசதி, சினிமாவில் இல்லை.. ரோட்டில், கோயில் வாசலில், நடைப்பாதையில் அன்றாடம் நாம் சந்திக்கும் விளி நிலை மனிதர்கள் தான் படத்தின் கதை மாந்தர்கள்.. அவர்களை, அவர்களின் ஊனத்தை முழுத்திரையில் பார்க்க நேரிடுகையில், நமக்கு ஒருவித discomfort வந்துவிடுகிறது. ஒரு திரைப்படத்தின் பொழுதுப்போக்கு பார்வையைத் தவிர்த்து, முழுதாய் ஊனமுற்றவர்களை, அவர்களின் அவலங்களை திரையில் சொல்லவந்த பாலாவுக்கு எனது பாராட்டுக்கள்.. எனினும், அவர்களின் ஊனம் படம் முழுதும் விரவிக் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றவிடாமல் செய்து விடுகிறது. ஆனால், படத்தில் இயக்குனர் நிர்ணயிக்க விரும்பியது இதைத்தான் என்பதால், நிச்சயம் பாலாவுக்கு இதில் வெற்றியே.

பாலா ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இருப்பினும், கதை நாயகன் வில்லனை காட்டடி அடிப்பது, விளி நிலை மனிதர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க camera-வை நடுவில் எடுத்துச் செல்வது, இறுதிக்காட்சிகளில் கண்டிப்பாய் ஒருவர் இறப்பது, பேசாத கதை நாயகன் எனும் பொழுது, அவரின் படத்திற்க்கு ஒரு Template வந்து விடுகிறது. பாலா தன்னுடைய முந்திய படங்களின் பாதிப்புக்களில் இருந்து சீக்கிரம் வெளியில் வருதல் நலம்.

இறுதியாக, நம்மூர் தென்னிந்திய படங்களில் இல்லாத சினிமாத்தனமா, குறைகளா, தமிழ் திரைப்படத்தில் நல்ல முயற்சிகளை பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருக்கலாம் என்பவர்களுக்கு, இத்தகைய விமர்சனங்கள் பாலா போன்ற மிகச்சிறந்த இயக்குனர்களை இன்னும் ஊக்கப்படுத்தவும், அவரிடம் இருந்து இன்னும் சிறந்த படைப்புகளை எதிர்ப்பார்க்கவும் தான். பாலா நிச்சயம் புரிந்துக் கொள்வார் எனறு நினைக்கின்றேன்...

Thursday, February 5, 2009

கர்ணன் Vs அர்ஜுனன்!!

முதலில் கதை!!

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான்.

அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள், ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய்.. யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தங்கம் தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன், கர்ணனை அழைத்து விபரம் சொன்னான்.

சரி என்று தலையாட்டிய கர்ணன், அவ்வழியே சென்ற இருவரை அழைத்து, ” இந்தத் தங்க குன்றை பாதிப் பாதியாக்கி, நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான்.

அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது, அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

இப்போ என்னேட கேள்வி??

கொடுப்பது எனத் தீர்மானித்ததும், தானத்தின் அளவை மதிப்பிடாமல், ஒரு நொடியினில் தானம் செய்துவிட்ட கர்ணன், கொடையில் சிறப்பினும், அவ்வளவு தங்கத்தையும் இருவருக்கு மட்டுமே பகிர்ந்தளித்தான்.

விலையுர்ந்த தானம் என்பதால் எல்லோருக்கும் 'பகிர்ந்தளிப்போம்' என்று எண்ணி, அளந்து மதிப்பிட்டு, எல்லோருக்கும் தானம் செய்தாலும், தானத்தை அளந்ததான் அர்ஜுனன்..

ஆகக் கூடி, கர்ணன் சிறந்தவனா, அர்ஜுனன் சிறந்தவனா?

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்!!

அருமையான பாடல் written by Ilayaraaja and wonderfully sung by Madhu Balakrishnan..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததா?
இம்மையை நான் அறியாததா?
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ்விடதில்..
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ்விடதில்..
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்..

ஒரு முறையா இரு முறையா பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய்..
புது வினையா பல வினையா, கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்..
மலர் பதத்தால் தாங்குவாய்..
உன் திரு கரம் எனை அரவனைத்து உனதருள் பெற..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

பூ - விமர்சனம்



My suggestion, இப்படத்தின் எந்த ஒரு காட்சியையோ, கதையையோ கேட்காமல், படிக்காமல் இப்படத்தை பார்க்கவும்.. நானும் எதையும் சொல்லப் போவது இல்லை..

என்னைப் பொறுத்த வரையில், மாரியாக நடித்திருக்கும் பார்வதிக்காகவே இப்படத்தை பார்க்கலாம். படத்தின் இறுதிக் காட்சிகளில் சசியும், மாரியும் உலுக்கி எடுத்து விடுகின்றனர்..

இது நிச்சயமாய் வழக்கமான தமிழ் படம் கிடையாது. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதைக்களம், அழுத்தமான மிகைப்படுத்தப்படாத நிகழ்வுகள், இப்படியும் இருக்க முடியுமா என்பதை விட, இப்படித்தான் நான் எனும் மாரியின் கதாப்பாத்திரம் மற்றும் இன்ன பிற வழக்கமான தமிழ் சினிமா விடயங்கள் இல்லையென்பதே, படம் மிக மெதுவாக நகர்வதாக எழும் எண்ணத்திற்க்கு காரணம்.. இத்தகைய காரணங்களைக் கொண்டு பூ போன்ற நல்ல முயற்சிகளை ஒதுக்கக் கூடாது..

பாலசந்தர் படங்களில் காட்டப்பட்ட பெண் கதாபாத்திரங்களையும், "Shoba"வின் ஒரு சில முயற்சிகளையும் தவிர்த்து பார்த்தால், பூ தமிழ் சினிமாவின் முதல் "Heroinism" படம்.

மிக மிக வருத்தமான விடயம், மலையாள "accent"-ல் இருந்து வெளியே வர முடியாததால், படத்தில் பார்வதியின் குரலுக்கு "dubbing" செய்துள்ளனர். இதனாலேயே இவ்வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை இழக்கின்றார், பார்வதி..

காதலையும், அதன் நேசத்தையும், முதல் முறையாய் உணர்ச்சிப்பூர்வமாய் தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ள சசிக்கு பாராட்டுக்கள்..