Friday, March 27, 2009

கமல் அண்ணாத்தே, சொந்தப் படம் எடுக்கற நீங்க, சொந்தமா எப்போ படம் எடுப்பீங்க??

பொதுவாகவே இன்ஸ்பிரேஸனுக்கும்(Inspiration) அப்பட்டமான காப்பிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு நளாயினியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'ரோஜா'வும், மகாபாரதத்தில் கர்ணன்னுக்கும் துரியோதனனுக்கும் இருந்த நட்பை சொன்ன 'தளபதி'யும் முதல் வகை. 'பொம்மரில்லு'விலிருந்து அடிக்கப்பட்ட ராஜாவின் 'சந்தோஷ சுப்பிரமணியம்' இரண்டாம் வகை என்றாலும் இவை மொழிமாற்று 'ரீமேக்' என்ற பெயரில் நிதர்சனமாய் ஒரிஜினலிருந்து உருவப்படுகின்றன் (உ.தா. தமிழிருந்து இந்திக்கு சென்ற கஜினி).

விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே ஒரிஜினலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றது. இருப்பினும் இவ்வகையான் ரீமேக்குகளின் மூலம் தமிழுக்கு சில தரமான படங்களும் (ஒரு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை) கிடைக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்து ஆங்கில படங்களில் இருந்து அப்பட்டமாய் உருவப்பட்டு, நம்மூரின் திறமையான டைரக்டர்களின் கைவரிசையில் வெற்றிக்கரமாய் மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிவிழா கண்ட படங்களும் ஏராளம்(ஆங்கில Mementoவில் இருந்து அட்டகாசமாய் மாறி இந்தியாவையே கலக்கிய கஜினி)..

எனக்கு தெரிந்து தமிழில் ஆங்கிலப் படங்களை கரு மாற்றம் செய்து(சிலதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு - மற்றது கப்சிப்) அதிக அளவில் வெற்றிக் கண்டது கமலின் திரைப்படங்களே. ஏறக்குறைய கமலின் வெற்றிப் படங்கள் அனைத்திற்கும் ஒரு ஆங்கில ஒரிஜினல் இருப்பது, கமலின் பரம விசிறியான எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே..

என்னப் பண்றது, கமல் ரொம்ப சிந்திச்சு கஷ்டப்பட்டு எடுத்த அவருடைய சிறந்த படமான HEY RAAM-ஏ ரொம்ப சீக்கிரம் பெட்டிக்குள்ள தள்ளிட்டோம். நம்ம மக்கள் ரசனைக்கு எதுக்கு ரொம்ப மெனக்கெடனும் கமல் நினைக்கிறார் போல.. இனி கமலின் தமிழும் ஆங்கில ஒரிஜினல்களும்.

பி.கு: சொந்தச் சரக்கோ பாரின் சரக்கோ, தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் ஊட்டும் எந்தச் சரக்கையும் சந்தோஷமாக அடிக்க நான் தயார்..

Patch Adams - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்





Very Bad Things - பஞ்சதந்திரம்




What About Bob - தெனாலி




Planes, Trains and Automobiles - அன்பே சிவம்




The Reincarnation of Peter Proud - எனக்குள் ஒருவன்




Moon over parador - இந்திரன் சந்திரன்




Green Card - நள தமயந்தி




Nine to Five - மகளிர் மட்டும்




Mrs. Doubtfire - அவ்வை சண்முகி




She-Devil - சதி லீலாவதி





Tie Me Up, Tie Me Down - குணா





To Sir, With Love - நம்மவர்


Tuesday, March 24, 2009

நினைவுகளில் விகடன் - 2

அப்போ எல்லாம் வாரந்தோறும் வியாழக்கிழமையே விகடன் கடைகளில் கிடைக்கும். பண்டிகை நாட்கள், சிறப்பு மலர் அல்லது சில வாரங்களில் மட்டும், புதன் மாலையே கடைக்கு வந்துடும். இப்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுப் போல, அப்போது நிஜமாகவே எனக்கும், என் அண்ணாவிற்க்கும், 'யார் முதலில் விகடன் படிப்பது'-ன்னு ஒரு போட்டியே நடக்கும். புதன் மாலை பள்ளியில் இருந்து திரும்பியதும், விகடன் வந்துவிட்டதா என்று அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்கு ஒரு மூன்று முறையாவது போயிட்டு வருவோம். முதலில் வாங்கி படித்து விட்டால் ஒரு சொல்ல முடியாத பெருமிதமும், அண்ணா முதலில் வாங்கிவிட்டால் ஏதோ தோற்றுவிட்டது போலவும் ஒரு எண்ணம்.

அதுவும் 90களின் காலக்கட்டத்தில் விகடனில் பல புதுமைகள் வந்துக் கொண்டிருந்த நேரம். 25 லட்ச ரூபாய் பரிசுப்போட்டி (அது பத்தி தனி பதிவு), முத்திரைக் கதைகள், சிறப்புக் கவிதைகள்-ன்னு பல போட்டிங்க வைச்சு கலக்கிட்டு இருந்தாங்க. அதனால முதல்ல யாரு விகடன் படிச்சு விடையை கண்டுப் பிடிக்கறாங்க-ன்னு எங்களுக்குள்ள பயங்கரப் போட்டி. அந்தப் பிரீயட்ல விகடன் ஆரம்பிச்சு வெச்ச விளையாட்டுத்தான் கடைசிப் பக்க 3D படங்கள்..

ஒவ்வொரு வாரமும், யாரு முதல்ல விகடனை வாங்கி, வந்திருக்கிற 3D படம் என்னன்னு கண்டுபிடிக்கறாங்கன்னு போட்டி. அண்ணா முதல்ல பார்த்துட்டா, 'இது திமிங்கலம்'-ன்னு சொல்ல, நான் பார்த்துட்டு 'இல்ல இது வவ்வால்'ன்னு அடிச்சு விடுவேன்.. ஏன்னா அது என்னப் படம் அப்படின்னு விகடன்ல எங்கேயும் க்ளூவோ விடையோ இருக்காது. அவங்கவங்க சொன்னதுத்தான் சரி-ன்னு அடுத்த விகடன் வர வரைக்கும் சொல்லிட்டு சுத்துவோம்...

முத வாரம் 3D படம் வந்ததும், அது என்ன, எப்படி பார்க்கறதுன்னு தெரியலை.. ஒரு ரெண்டு மூணு படம் பார்த்ததும், எப்படி வெச்சு பார்க்கனும்ன்னு பிடிபட்டுடிச்சி.. அதுக்கு அப்புறம் வந்த வாரங்களில, படத்தை பார்த்ததுமே என்னன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்னா பாருங்களேன்..

இந்த 3D படத்தை கேள்வியே படாதவங்களுக்கும், மலரும் நினைவுகளுக்காகவும், சில 3D படத்தை கீழே தந்து இருக்கேன்.. முதல்ல ட்ரை பண்றவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், விடாமல் முயற்சி பண்ணுங்க.. கண்டிப்பா ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் காத்துக்கிட்டு இருக்கு. 'படம் எப்படி பார்க்கறது'ன்னு உதவிக்கு சில தொடர்புகளையும் இணைச்சு இருக்கேன் (http://www.3dphoto.net/text/viewing/technique.html, http://www.magiceye.com).

இப்போ ஜோரா எல்லோரும் கீழே இருக்கற 3D படங்களை பார்த்துட்டு, இந்த 3D படங்களில் இருக்கறது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).





Saturday, March 21, 2009

டைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா??

போன வாரம் ஒளித்தட்டுல 'இந்தியன்' படத்தை மீண்டும் பார்த்தேன்.. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் 'பச்சைக்கிளிகள் தோளோடு' பாடலின் இறுதியில் வரும் இக்காட்சி படத்துடன் ஒன்றிப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. படம் முடிந்ததும், மீண்டும் பாடல்களை மட்டும் ஓட விட்டு பார்க்கையில், பாடல் காட்சியில் இருந்த சிறு தவறு பிசிறியது. அது என்னக் காட்சின்னு இந்த நிழற்படத்தில் பாருங்க (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).





என்னத் தப்புன்னு கண்டுப்பிடிச்சுட்டிங்களா? கூகிளாண்டவரில் தேடியதில், ஒரிஜினல் கிராபிக்ஸ் காட்சியில் இரண்டு கமல் ஆடும்படி மட்டுமே அமைப்பதாக முதலில் ஷங்கருக்கு எண்ணமாம். பட வேலைகளின் போது, கிராபிக்ஸ் இயக்குனர் வெங்கி, இரண்டு கமலுக்கும் பின்னால் ஒரு கண்ணாடியை போட்டு, கமலின் உருவ பிரதிபலிப்பைக் காட்டினால் இயல்பாய் இருக்கும் என்று ஷங்கரிடம் ஒகே வாங்கி, அந்த அலமாரியும், கமலின் பிரதிபலிப்பையும் கிராபிக்ஸில் கொண்டு வந்தாராம். கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதாலோ என்னவோ, ஒவ்வோரு காட்சியையும் மிகவும் சிரத்தையுடன் அணுகும் ஷங்கர், இதை கவனிக்க தவறிட்டாருன்னு நினைக்கிறேன்..

இன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.

1. நிழற்படத்தோட தரம் சரியில்லன்னு நான் முதல்ல ஒழுங்கா ஒத்துக்கறது(பின்ன youtube-ல இருந்து சுட்டா??),
2. என்ன தப்புன்னு, படத்துல வட்டம் போட்டு காட்டிடறது..



3. அப்படியும் புரியாத 'ஓளிவிளக்கு'-க்கு (அதுதாங்க tubelight), கண்ணாடிக்கு முன்னே நின்னு பார்த்தா உங்க முகம் தெரியும், கண்ணாடிக்கு முதுகு காமிச்சு நின்னாலும், கண்ணாடியில் உங்க முகம் தெரியுமா??

ஒரிஜினல் பாட்டுக் கீழே, நீங்களே பார்த்துக்கங்க..

Tuesday, March 17, 2009

சாப்ட்வேர் இஞ்சினியராய் வடிவேலு..



"காது இந்த வீங்கு வீங்கியிருக்கே, எத்தனைப் பேரு உங்களை பேசினாங்க?"

"முதல்ல ஒரு மூணு நாலுப் பேருத்தான் பேசினாங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது ஒரு மேனேஜரு, இன்னொரு மேனேஜருக்கு போன் பண்ணி, "ப்ரீயா இருந்தா வாங்க, ஒருத்தன் சிக்கி இருக்கான்"ன்னு சொன்னான்.

அந்த மேனேஜரு சொன்னான், "நான் கொஞ்சம் பிசியா இருக்கேன், வேணும்னா, என்னோட ரூமுக்கு அனுப்பி விடு, நான் பார்த்துக்கறேன்"-ன்னான். இவனுங்க முடிச்சவுடனே ஒரு கம்பெனி ஷட்டில புடிச்சு, அந்த மேனேஜருக்கிட்ட அனுப்பி விட்டுட்டாங்க. அங்க ஒரு ஏழுப் பேரும்மா. அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பேசினாங்க.. அந்த மீட்டிங் முடிஞ்சதும், இன்னொரு ஷட்டில புடிச்சு, என்னை ஏத்தி விட்டுட்டாங்க..

சரி நம்மள வேலையை பார்க்கத்தான் அனுப்பறாங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தேன்-மா. அந்த ஷட்டிலு நேரா இன்னோரு 2nd லெவல் மேனேஜரு பில்டிங்க்கு போச்சு.. அந்த மேனேஜரு ரூமுக்குள்ள 11 பேரும்மா.. 3 மணி நேரம்.. காது வலிக்க வலிக்க பேசினாங்க.. சரி பேசிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.."

"விட்டுட்டிங்களா, திரும்பி நீங்கப் பேசலை??"

"இல்லை"

"ஏன்?"

"அவங்க பேசும்போது ஒருத்தன் சொன்னான், 'எவ்வளவு பேசினாலும், இவன் கேட்கிறான்டா, இவன் ரொம்ப நல்லவன்'டான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா. நானும் இவனுங்க பேசறதக் கேட்கற மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கறது"..

உ ஊ ஊஊஊஊஊ

Monday, March 16, 2009

கல்லூரியும் கற்று மற - 1

"பூர்ணிமா, வேணா இன்னிக்கு ஈவினிங் 7 - 7:15 மணிக்குள்ள, யாருக்கும் தெரியாம தனியா உட்கார்ந்து நீ ஏதாவதொரு FM சேனல்ல ஒரு தமிழ் பாட்டுக் கேளு.. நாளைக்கு காலையில நீ என்ன FM-ல என்ன தமிழ் பாட்டுக் கேட்டேன்னு நான் சொல்றேன்."

"சரி வருண், நான் இன்னிக்கு கேட்ட பாட்டு என்னன்னு கரெக்டா நீ நாளைக்கு சொல்லிட்டா, உனக்கு மாய மந்திரம் எல்லாம் தெரியும், அப்படின்னு நான் ஒத்துக்கறேன்."

விளையாட்டாய் தான் ஆரம்பித்தது.. பூர்ணிமா எங்கள் வகுப்பின் டாப் ரேங்க் மாணவி.. "என்னப்பா, நிஜமாத்தான் சொல்றீங்களா?" என்பது பூர்ணிமாவின் டிரேட் மார்க் வசனம். நூற்றுக்கு 2 மார்க் வாங்கிவிட்டு பருத்தி வீரன்கள் நாங்கள் லந்துக்கட்ட, நூற்றுக்கு 98 மார்க் வாங்கிவிட்டு 2 மார்க் போய்விட்டதே என்று அலப்பறை பண்ணும் பார்ட்டி இவர்.

வகுப்பில் மொத்தம் இருந்த 17 மாணவர்களில், 13 பேர் கல்லூரி விடுதியில் தங்கிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த காலம் அது.. "பென்சில் ஜோசியம், மேஜிக்" என ஆளாளுக்கு நாங்கள் கதை அளந்துக் கொண்டிருந்தாலும், வருணின் இந்த 'மந்திரம்' சுத்தி நின்று கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு புரிபடவேயில்லை. விடுதிக்கு திரும்பியதும், வருண் சொன்ன பிளானைக் கேட்டதும், மிகவும் உற்சாகமாகி, அவனுக்கு எல்லா உதவியும் செய்வதாக ஒப்புக்கொண்டோம்.

பிளானின் முதற்படி, அக்காலத்தில் இருந்தது மொத்தம் 4 தமிழ் FM சேனல்கள். ஆக எங்களுக்கு தேவைப்பட்டது, 4 ரேடியோக்கள் (பின்ன, 4 சேனல்களிலும் 7-7:15 என்ன பாட்டு போடறான்னு தெரியனும் இல்ல?). ஆரம்பித்தது எங்களின் ரேடியோ தேடல், விடுதியில் ஒவ்வொரு ரூமாய் சென்று கெஞ்சிக் கூத்தாடியதில் 3 தான் சிக்கின. முயற்சியில் சற்றும் மனம் தளராமல், பிளானின் அடுத்த கட்டமாய் சரியாக மாலை 7 மணிக்கு ஆரம்பித்து, 3 ரேடியோக்களில் 4 FM சேனலையும் மாற்றி மாற்றி 7:15 வரை ஒலிபரப்பான மொத்தம் 5 பாடல்களையும் ( நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, புது வெள்ளை மழை இங்கு, மதுரை மரிக்கொழுந்து வாசம், யாதும் ஊரே யாவரும் கேளீர், ஜெர்மனியின் செந்தேன் மலரே) குறித்துக் கொண்டோம்.

பிளான்படி 4 FM சேனல்-லயும் குறிப்பிட்ட டைம்ல என்னென்ன பாட்டு-ன்னு கேட்டாச்சு. ஆனா 5 பாட்டுல பூர்ணிமா என்னப் பாட்டுக் கேட்டு இருப்பாங்கன்னு கண்டுப் பிடிக்கணும். பூர்ணிமா, 'இளையராஜா விசிறியா', 'ரகுமான் விசிறியா', அவங்க டேஸ்ட் என்ன, 5 பாட்டுல இருந்து, வருண் பூர்ணிமா கேட்ட அந்த ஒரு பாட்டை எப்படி குத்துமதிப்பா சொல்லப்போறான் அப்படின்னு அன்னிக்கு நைட் புல்லா யோசிச்சுக்கிட்டே தூங்கிட்டோம்.

அடுத்த நாள் காலையில எங்களுக்கு எல்லாம் ஒரே படபடப்பா இருக்கு. வருண் மட்டும் பெருசாக ஒண்ணும் கண்டுக்கலை. "மச்சி, இப்போ இந்த 5 பாட்டையும் தனித்தனியா 'என்ன பாட்டு, படம், சேனல், பாடினவங்க-ன்னு' எழுதிக் வெச்சுக்கலாம், இல்லைன்னா மறந்துடுவோம்" அப்படின்னான். சரி ஆச்சுன்னு, அந்த பாட்டுங்களை தனித்தனி பேப்பர்-லயும் எழுதிட்டு கிளாஸுக்கு கிளம்பியாச்சு.

உள்ளே நுழைஞ்சதும் "ஏ வருண், என்ன என்னைப் பார்த்துட்டு ஓடற, சும்மா கதைத் தான விட்ட என்கிட்ட?"

"பூர்ணி, நேத்து நான் சொன்ன டைம்ல நீ தமிழ் FM-ல பாட்டுக் கேட்டியா?"

"நீ சொன்ன டைம்ல ஒரு தமிழ் பாட்டுக் கேட்டேன்பா, நீ கதை விடலைன்னா, உனக்கு நிஜமாலுமே மந்திரம் தெரியும்-னா, அது என்னப் பாட்டுன்னு சொல்லுப் பார்ப்போம்.."

இதற்க்குள் விசயம் பரவி மொத்த வகுப்பு பெண்கள் கூட்டமும் இப்போ சுத்தி நின்னுட்டாங்க. பசங்களுக்கு எல்லாம், விரல்ல இருந்து கடிச்சு துப்ப நகமே இல்லைங்கற அளவுக்கு ஒரே டென்சன். வருணுக்கும் இதே நிலைமைத்தான்..

ஆனாலும் "பூர்ணி, நேத்து நீ என்னப்பாட்டு கேட்டேன்-ன்னு இப்போ எல்லார் முன்னாடியும் சொல்லு, நான் எனக்கு மந்திரம் தெரியும்னு உனக்கு நிரூபிக்கிறேன்"

கொஞ்ச நேரம் பூரணி யோசிச்சுட்டு, "சரி வருண், நான் நேத்துக் கேட்ட பாட்டு வந்து, 'மதுரை மரிக்கொழுந்து வாசம்'ன்னு இளையராஜா பாட்டு, சூரியன் FM-ல கேட்டேன்"

உடனே நம்ம பய இதைக் கேட்டுட்டு விட்டான் பாருங்க ஒரு டயலாக்.

"எல்லோரும் நல்லா பாருங்க, பூர்ணி கேட்ட இந்தப் பாட்டை நேத்து நைட்டே என்னோட மந்திரத்துல கண்டுப்பிடிச்சு ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுட்டேன். இந்தாங்க, நீங்களே இதை படிச்சு பாருங்க-ன்னு" நாங்க எழுதி வெச்சிருந்த அந்த பாட்டு பேப்பரை அவனோட பேண்ட் பாக்கெட்-ல இருந்து எடுத்து கொடுத்துட்டான்.

நாங்க காலேஜ் படிச்ச 3 மூணு வருசத்திலேயும், வருணுக்கு நிஜமாவே மந்திரம் தெரியும் அப்படின்னே பூரணி பயந்துக்கிட்டு இருந்தாங்க.

பி.கு: "டேய் வருண், மொத்தம் 5 பாட்டுன்னு, 5 பேப்பர் இருந்ததேடா, எப்படி பேண்ட்ல இருந்து கரெக்டா அந்த பாட்டு பேப்பரை மட்டும் எடுத்துக் குடுத்தே.."

"மச்சி, 5 பேப்பரையும் ஒவ்வொன்னா நான் வேற வேற பாக்கெட்ல வெச்சுக்கிட்டேன். பேண்டல நாலும், சர்ட் பாக்கெட்ல ஒண்ணுன்னு"..

"ஸுப்பர்-டா, அப்புறம் ஏண்டா நீயும் அவ்வளவு டென்சனா இருந்தே?"

"மச்சி, பூர்ணி பாட்டை சொன்னதும், நாம எழுதி வெச்ச 5-ல ஒண்ணுத்தானதும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. ஆனா எந்த பாட்டு எந்த பாக்கெட்ல வச்சேன் அப்படிங்கறதை மறந்துத் தொலைச்சுட்டேன். அதை யோசிக்கத்தான் ரொம்ப டென்சனாயிடுச்சி,.."

(நீங்க யோசிக்கறதும் ரொம்ப கரெக்ட், வருண் இப்போ மேனேஜரா நல்லா குப்பைக் கொட்டிட்டு இருக்கான்)..

Sunday, March 15, 2009

நினைவுகளில் விகடன் - 1

விகடனின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில், விகடனில் வெளிவந்த, என்னை பாதித்த படைப்புக்களை பகிரும் ஒரு முயற்சி..

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர், விகடனில் வெளிவந்த இக்கவிதையை(முத்திரை?), இன்றும் யாராவது நினைவில் வைத்திருக்கின்றீர்களா? ஒருப் பெண்ணின் வல்லிய பிரச்னையை 5 வரிகளில் உணர்த்தும் இக்கவிதை சுஜாதா பிரபலப்படுத்திய Haiku (கவிதையின் இறுதி வரியில் ஒரு மெல்லிய திடுக்!!) வகையறாவை ஒத்திருக்கும்.

குப்பைத் தொட்டியின்கீழ்
ரத்தம் தோய்ந்த
சானிடரி நாப்கினை
பார்க்கையில்
அடிவயிற்றை வலிக்கின்றது..
ஆண்மகனாகிய எனக்கும்..

(இதை எழுதிய கவிஞர் பெயர் நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்).

Friday, March 13, 2009

கேள்வி



வீட்டு மார்கேட்ஜும்
கிரெடிட் கிரைஸஸும்
சேர்ந்திங்கு வந்ததால்
பொருளாதார வீழ்ச்சி..

எனக்குத்தான் இல்லையே,
வாங்கவொரு வீடும்
கிரெடிட் கொள்ள கார்டும்..

பிறகேன் வந்தது,
இக்குடிசையுனுள்
பொருளாதாரத்தின் தாழ்ச்சி??

அன்றும், இன்றும்..



மீசையுடன் அரும்பத்
தொடங்கியதும் காதல்..
மீசையுடன் நரைக்கத்
தொடங்குவதும் காதல்...

சாபம் கொண்ட நெருப்பினால்
மதுரை எரிந்ததும் காதல்..
கோபம் கொண்ட விழியினால்
நீயென்னை எரிப்பதும் காதல்...

பார்வதி பின் சென்று
தேவதாஸ் ஆனதும் காதல்..
யுவதிகள் பின் சென்று
அகதிகள் ஆவதும் காதல்..

'அடி'யவள் வந்ததும்
'குடி'யவன் விட்டதும் காதல்.
'புதுவை' சென்றதும்,
மதுவை கொள்வதும் காதல்..

பிரிந்த அக்கணங்களில்,
தாடியை வளர்த்ததும் காதல்..
சேர்ந்திருக்கும் இக்கணங்களில்
தாடி வளர்வதும் காதல்..

அன்று
காதல் போயின்
சாதல் சாதல்..

இன்று
சாதலே ஆயினும்
வேண்டாம் இக்காதல்..

Wednesday, March 4, 2009

ஆதலினால் காதல் செய்வீர் - 1



பிரிந்து செல்லும்முன்
உனக்கோர் விண்ணப்பம்..

நாளைய பொழுதில்
எங்கேனும் சந்திக்கையில்
கணவரென எவரையும்
முகாந்திரம் செய்யாதே..

இறுதிவரை எனதுலகில்
எனக்கே உரியவளாய்
உன்னை நிறுத்திக்கொள்ள..

என்ன செய்வது இவரை??



எப்பொழுது எங்கு போகிறார், எவரிடமும் சொல்வதில்லை,
எப்பொழுது வீடு திரும்புவார், எவருக்கும் தெரிவதில்லை..

ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை,
இருந்த இடத்தில் பொருள்கள் இருப்பதுமில்லை..

நாம் சொல்வதை அவர் கேட்பதுமில்லை.
அவர் சொல்வது நமக்கு புரிவதுமில்லை..

நமது உணவு அவருக்கு பிடிப்பதில்லை.
அவர் உண்பது நமக்கு உணவேயில்லை..

வேலை அசதியினால் நமக்கு தூக்கம்.
அசராமல் தூங்குவதே இவருக்கு விருப்பம்....

இருக்கும் பழைய பொருளை உடைப்பதும்
உடைப்பதற்க்கு புதிய பொருளை கேட்பதும்

3 வயதில் "அவரிடம்" சொல்வதற்கு ஒன்றுமில்லை...

இருப்பினும்
என்ன செய்வது இவரை??